Tuesday 7 February, 2012

திருவண்ணாமலையும் சுந்தரமூர்த்தி நாயனாரும் (5)

சிறிய இடைவெளிக்கு பிறகு இதோ இன்னும் ஒரு இனிய பாடல். 

இது சுந்தரரின் அபிமான திருவாரூரில் பாடப்பட்டதாகும். திருவாரூர் திருத்தலம் தம்பிரான் தோழரின் வாழ்வில் நடந்த பல சுவையான சம்பவங்களுக்கு சான்றாக விளங்குவது. இறைவன் இப்படி கூட ஒரு தொண்டருக்கு அருள் செய்ய முடியுமா! ஆஹா, சுந்தரர் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என்று ஒவ்வொரு சிவத்தொண்டரும் பொறாமை படும் வகையில் பல சம்பவங்கள் நடந்த இடம். சுந்தரர் பாடிய பாடல்களுள் கிடைத்தவற்றிலே மிகவும் உருகி பாடிய இடம் திருவாரூர் தான்  என்பது என் தாழ்மையான கருத்து.

இந்த பாடல் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தன் நண்பர் சேரமான் பெருமாளுடன் பாண்டி நாட்டு திருத்தலங்களை தரிசித்து விட்டு திருவாரூர் திரும்பிய போது பாடிய பாடல். கிட்டத்தட்ட இவ்வுலக வாழ்க்கை போதும், மீண்டும் உன்னடி சேர்வதே இன்பம் என்ற நிலை எய்திய பின் பாடிய அருமையான பாடல் 

உதிரநீர் இறைச்சிக் குப்பை எடுத்தது மலக்குகை மேல்
வருவதோர் மாயக் கூரை வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
கரியமால் அயனும் தேடி கழலினைக் காண மாட்டா
அரியனாய் நின்ற ஆரூர் அப்பனே அஞ்சி னேனே. 

இப்பாடலில் திருமாலும் பிரமனும் தேடி காண முடியாத திருவடிகளை உடைய திருவாரூரில் உள்ள என் தந்தையே! என்று திருவாரூர் ஈசனை அண்ணாமலையாரை குறிப்பிட்டே அழைக்கிறார்!

குருதி நீரும் தசைகுவியலும் அதன்மேல் போர்த்திய தோலும் உள்ள கூரைக்குள் வாழும் அற்ப மானிட உடல் வாழ்விற்கு அஞ்சுவதாக அவர் கூறுகிறார்!

5 comments:

  1. பிரியா அவர்களே...திருவண்ணாமலையையும் சுந்தரரையும் விட்டு நீங்கள் பிரியாமலே இருக்கின்றீர்கள்...உங்கள் களப்பணியால் உசுப்பேற்றப்பட்டு.....ஏழாம் திருமுறையில் என் அறிவிற்கு எட்டியவரை சுந்தரரையும் அண்ணாமலையாரையும் சுட்டிக் காட்டுகின்றேன்....



    1. பதிகம் பெயர் : திருஇடையாற்றுத்தொகை
    பாடல் :
    கடங்களூர் திருக்காரிக் கரைகயி லாயம்
    விடங்களூர் திருவெண்ணி அண்ணா மலைவெய்ய
    படங்களூர் கின்றபாம் பரையான் பரஞ்சோதி
    இடங்கொளூர் எய்தமான் இடையா றிடைமருதே.


    2. பதிகம் பெயர் :திருக்கருப்பறியலூர்
    பாடல் :
    சங்கேந்து கையானுந் தாமரையின்
    மேலானுந் தன்மை காணாக்
    கங்கார்ந்த வார்சடைகள் உடையானை
    விடையானைக் கருப்ப றியலூர்க்
    கொங்கார்ந்த பொழிற்சோலை சூழ்கனிகள்
    பலவுதிர்க்குங் கொகுடிக் கோயில்
    எங்கோனை மனத்தினால் நினைந்தபோ
    தவர்நமக் கினிய வாறே.


    3.பதிகம் : திருக்கடவூர்வீரட்டம்
    பாடல் :
    அயனோ டன்றரியும் அடியும்முடி காண்பரிய
    பயனே எம்பரனே பரமாய பரஞ்சுடரே
    கயமா ருஞ்சடையாய் கடவூர்த்திரு வீரட்டத்துள்
    அயனே என்னமுதே எனக்கார்துணை நீயலதே.

    4.பதிகம் :திருக்கற்குடி
    பாடல் :
    நிலனே நீர்வளிதீ நெடுவானக மாகிநின்ற
    புலனே புண்டரிகத் தயன்மாலவன் போற்றிசெய்யுங்
    கனலே கற்பகமே திருக்கற்குடி மன்னிநின்ற
    அனல்சேர் கையினனே அடியேனையும் அஞ்சலென்னே.

    ReplyDelete
  2. 5.பதிகம் : திருஅரிசிற்கரைப்புத்தூர்
    பாடல் :
    வணங்கித்தொழு வாரவர் மால்பிர மன்மற்றும்
    வானவர் தானவர் மாமுனிவர்
    உணங்கற்றலை யிற்பலி கொண்ட லென்னே
    உலகங்கள் எல்லாமுடை யீர்உரையீர்
    இணங்கிக் கயல்சேல் இளவாளை பாய
    இனக்கெண்டை துள்ளக்கண் டிருந்தஅன்னம்
    அணங்கிக் குணங்கொள் அரிசிற் றென்கரை
    அழகார் திருப்புத்தூர் அழகனீரே.

    6.பதிகம் : திருநாட்டுத்தொகை
    பாடல் :
    தழலும் மேனியன் தையலோர் பாகம மர்ந்தவன்
    தொழலுந் தொல்வினை தீர்க்கின்ற சோதிசோற் றுத்துறை
    கழலுங் கோவை யுடையவன் காதலிக் கும்மிடம்
    பழனம் பாம்பணி பாம்புரந் தஞ்சைதஞ் சாக்கையே.


    7.பதிகம் : திருத்துறையூர்
    பாடல் :
    மாவாய்ப் பிளந்தானும் மலர்மிசை யானும்
    ஆவா அவர்தேடித் திரிந்தல மந்தார்
    பூவார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூர்த்
    தேவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

    8.பதிகம் : திருக்கலையநல்லூர்
    பாடல் :
    மாலயனுங் காண்பரிய மாலெரியாய் நிமிர்ந்தோன்
    வன்னிமதி சென்னிமிசை வைத்தவன்மொய்த் தெழுந்த
    வேலைவிட முண்டமணி கண்டன்விடை யூரும்
    விமலனுமை யவளோடு மேவியஊர் வினவிற்
    சோலைமலி குயில்கூவக் கோலமயி லாலச்
    சுரும்பொடுவண் டிசைமுரலப் பசுங்கிளிசொற் றுதிக்கக்
    காலையிலும் மாலையிலுங் கடவுளடி பணிந்து
    கசிந்தமனத் தவர்பயிலுங் கலயநல்லூர் காணே.


    9.பதிகம் : திருவேள்விக்குடி
    பாடல் :
    இந்திர னுக்கும் இராவண
    னுக்கும் அருள்புரிந்தார்
    மந்திரம் ஓதுவர் மாமறை
    பாடுவர் மான்மறியர்
    சிந்துரக் கண்ணனும் நான்முக
    னும்முட னாய்த்தனியே
    அந்தரஞ் செல்வத றிந்தோமேல்
    நாமிவர்க் காட்படோ மே


    10.பதிகம் : திருப்பழமண்ணிப்படிக்கரை
    பாடல் :
    திரிவன மும்மதிலும் எரித்தான்இமை யோர்பெருமான்
    அரியவன் அட்டபுட்பம் அவைகொண்டடி போற்றிநல்ல
    கரியவன் நான்முகனும் அடியும்முடி காண்பரிய
    பரியவன் பாசுபதன் பழமண்ணிப் படிக் கரையே.

    11.பதிகம் : திருமழபாடி
    பாடல் :
    நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றிசெய்யுங்
    குறியே நீர்மையனே கொடியேரிடை யாள்தலைவா
    மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே
    அறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

    ReplyDelete
  3. ஒரு அழகிய விருதை தங்களுக்கு வழங்கியுள்ளது தொடர்பான இடுகைக்கு வருகை தாருங்கள்
    http://avargal-unmaigal.blogspot.com/2012/02/blog-post_10.html

    ReplyDelete
  4. சுந்தரர் பாடிய பாடல்களுள் கிடைத்தவற்றிலே மிகவும் உருகி பாடிய இடம் திருவாரூர் தான் என்பது என் தாழ்மையான கருத்து.

    அருமையான பகிர்வுகள்..கருத்துரைகள் அழகு.. பாராட்டுக்கள்..

    ReplyDelete