Friday 13 July, 2012

கரபுரநாதர்



சென்னை - வேலூர் மார்கத்தில் காவேரிபாக்கத்துக்கு அருகே உள்ளது திருப்பாற்கடல். இங்குள்ள கரபுரநாதர் ஆலயத்தை அப்பர் தன் காப்பு திருத்தாண்டகத்தில் வைப்பு தலமாக பாடியுள்ளார்.

ஆலயத்தை பற்றிய குறிப்புக்கள் ஆங்கிலத்தில் இதோ

http://aalayamkanden.blogspot.in/2012/07/treasure-trove-waiting-to-be-explored.html 

அப்பர் பாடிய பாடல் வருமாறு

தெண்ணீர் புனற் கெடில வீராட்டமும்
    சீர்காழி வல்லத் திருவேட்டியும்
உண்ணீரார்  ஏடகமும் ஊறல் அம்பர்
    உறையூர் நறையூர் அரண நல்லூர்
விண்ணார் விடையான் விளமர் வெண்ணி
    மீயச்சூர் வீழிமிழலை மிக்க
கண்ணார் நுதலார் கரபுரமுங் 
    காபாலியாரவர் அவர்தங் காப்புகளே

இத்தலத்திற்கு மற்றுமொரு சிறப்பும் உண்டு. இங்குள்ள முருகன் அருணகிரிநாதரால் பாடப் பெற்றவராகும். அப்பாடல் இதோ:


இக்கோவிலின் தொன்மையையும் பழமையையும் விளக்க 1926ம் ஆண்டு அச்சடிக்க பட்ட ஒரு லட்சதீப விழா மடலை காட்டினார் அர்ச்சகர். அதிலிருந்த தகவல்கள் இதோ:

கார்சொரியும் பாலாற்றின் களிபெய்தும் பஞ்சதரு பார்பொழியும் செந்நெற் பாலிக்கும் - தார்கேழில் திருகரபுரத்தீசன் தீபமஹோத்சவத்திற்காப் பெருச்சாளி யூர்தியை பேணு

ஒலி கடல் சூழ்ந்த உலகிற்கு ஒரு மாமணி யென விளங்கும் நாவலோங்கிய மா பெருந்தீவினுள் தொன்மை நலன்கவின் குமரி கண்டத்திலே முத்தமிழ் சீவணி மூவா நலந்தரும் ஒண்டமிழ் நாட்டில் தண்டகன் முதலா தண்டாசிறப்பின் பண்டை மன்னர் பற்பலர் ஆண்ட தொண்டை நாட்டின் கண்ணே முத்திதரு நகர் எழிலின் முதன்மையானதும், எல்லா உலகங்கட்கும் இறைவியாகிய உமையம்மையாரே திருகாமகோட்டதில் எழுந்தருளி இருந்து உயிர்களிடத்து அருளைக் கொண்டருளிய காமகண்ணியார் என்னும் பெயரோடு பொருந்தி முப்பத்திரெண்டாம் வனத்தருளியுள்ள கம்பையாற்றின் கண் ஒப்புயர்வற்ற ஒரு மாவின் கீழ் மணல் லிங்கமூர்த்தியை எழுந்தருளப் பண்ணி பூசிக்கும் பொழுது அம்மையின் அன்பை விளக்கும் பொருட்டு எம்பெருமான் ஏவிய வெள்ளத்துக்கு ஆற்றாது அச்சிவளிங்கபெருமானை தழுவிக் கொள்ள அவர் குழைந்தருளி முலைதழும்பும் வளைத்தழும்பும் கொண்டு வீற்றிருக்க பெற்றதும், துண்டிரன், தண்டகன், தொண்டைமான்கள், பல்லவர்கள், சோழர்கள், சாளுக்கியர்கள், விஜயநகரத்து அரசர்கள் முதலிய பல்லோர்களால் ஆளப்பட்டதும் இன்றைக்கு 4300 ஆண்டுகளுக்கு முன் காஞ்சி மண்டலத்தை சோழன் திருமாவளவனாகிய கரிகாற் பெருவளத்தான் நாடாகி நகரம் ஸ்தாபிக்க பட்டதும் பழைய கல்வெட்டுகளிலும், சங்க நூல்களிலும் கடற்கச்சி என்று சிறப்பிக்க பட்டதுமான காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்ட தொண்டை மண்டலத்து இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றாகிய படுவூர் கோட்டத்து தனியூரான அவனி நாராயண சதுர்வேதி மங்கலம் என்கிற காவேரிபாக்கதிற்கு தெற்கில் இரண்டு மைல் தூரத்தில் உள்ள திருபாற்கடல் என வழங்கும் கரபுரத்தில் மிகவும் பழமையுற்றதும் மூவர் தேவாரத்தில் வைப்பு தலமாக பாடப்பட்டதும் ,மதுரை கொண்ட கோபரகேசரிவர்மன், பார்த்திவேந்திர பல்லவன், இளங்கோ வேளார்பூதி முதலிய பல அரசர் காலத்து கல்வெட்டுகள் அமைக்க பெற்றதும், ஈழத்தரையின் போரில் வெற்றி கொண்ட காரிமங்கலமுடையார் முதலிய நால்வரால் திருப்பணி முதலிய செய்யப்பட்டதும் அடியார்கள் இடர்கள் நீக்கியாளும் பொருட்டு திருக்கோயில் கொண்டு எழுந்தருளி நின்ற ஸ்ரீ அபிதகுஜாம்பாள் வாமபாகத்தில் அமர்ந்த திருகரமுடைய நாயனார்.

இதிலிருந்து இக்கோவிலின் தொன்மையையும், காலத்தையும், நாம் நன்கு அறியலாம்.

#yOqnezkbLZ# 

Tuesday 7 February, 2012

திருவண்ணாமலையும் சுந்தரமூர்த்தி நாயனாரும் (5)

சிறிய இடைவெளிக்கு பிறகு இதோ இன்னும் ஒரு இனிய பாடல். 

இது சுந்தரரின் அபிமான திருவாரூரில் பாடப்பட்டதாகும். திருவாரூர் திருத்தலம் தம்பிரான் தோழரின் வாழ்வில் நடந்த பல சுவையான சம்பவங்களுக்கு சான்றாக விளங்குவது. இறைவன் இப்படி கூட ஒரு தொண்டருக்கு அருள் செய்ய முடியுமா! ஆஹா, சுந்தரர் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என்று ஒவ்வொரு சிவத்தொண்டரும் பொறாமை படும் வகையில் பல சம்பவங்கள் நடந்த இடம். சுந்தரர் பாடிய பாடல்களுள் கிடைத்தவற்றிலே மிகவும் உருகி பாடிய இடம் திருவாரூர் தான்  என்பது என் தாழ்மையான கருத்து.

இந்த பாடல் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தன் நண்பர் சேரமான் பெருமாளுடன் பாண்டி நாட்டு திருத்தலங்களை தரிசித்து விட்டு திருவாரூர் திரும்பிய போது பாடிய பாடல். கிட்டத்தட்ட இவ்வுலக வாழ்க்கை போதும், மீண்டும் உன்னடி சேர்வதே இன்பம் என்ற நிலை எய்திய பின் பாடிய அருமையான பாடல் 

உதிரநீர் இறைச்சிக் குப்பை எடுத்தது மலக்குகை மேல்
வருவதோர் மாயக் கூரை வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
கரியமால் அயனும் தேடி கழலினைக் காண மாட்டா
அரியனாய் நின்ற ஆரூர் அப்பனே அஞ்சி னேனே. 

இப்பாடலில் திருமாலும் பிரமனும் தேடி காண முடியாத திருவடிகளை உடைய திருவாரூரில் உள்ள என் தந்தையே! என்று திருவாரூர் ஈசனை அண்ணாமலையாரை குறிப்பிட்டே அழைக்கிறார்!

குருதி நீரும் தசைகுவியலும் அதன்மேல் போர்த்திய தோலும் உள்ள கூரைக்குள் வாழும் அற்ப மானிட உடல் வாழ்விற்கு அஞ்சுவதாக அவர் கூறுகிறார்!

Wednesday 28 December, 2011

திருவண்ணாமலையும் சுந்தரமூர்த்தி நாயனாரும் (4)

நீண்ட இடைவெளிக்கு பின் இதோ அடுத்த பாடல். இது சுந்தரர் மேலை திருமணஞ்சேரி என்று இன்று விளங்கும் எதிர்கொள்பாடியில் பாடியது.
"மத்த யானை ஏறி மன்னர் சூழ வருவீர்காள் " என தொடங்கும் பாடலில்

குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழல் சடையன்,
மருது கீறி ஊடு போன மால், அயனும் அறியா,
சுருதியார்க்கும் சொல்ல ஒண்ணா, சோதி; எம் ஆதியான்,
கருது கோவில், எதிர்கொள்பாடி என்பது அடைவோமே!

இதன் பொருள் :

யானையின் தோலை உதிரம் ஒழுக போர்த்திக்கொண்டவனும், குழல் போன்ற சடையை உடையவனும், இரு மருத மரங்களை முறித்து அதனிடையே தவழ்ந்த மாயோனும், பிரமனும் காணாத , வேதத்தை உணர்ந்தவர்களுக்கு விவரிக்க இயலாத ஜோதி வடிவானவனும், எங்கள் முதல்வனுமாகிய சிவபிரான் தன இடமாக கருதுகின்ற எதிர்கொள்பாடி திருக்கோவிலை அடைவோம் வாருங்கள் என்று பாடுகின்றார்.

இப்பாடலில் இரு மருதமரங்களை முறித்து அதனிடையே தவழ்ந்த மாயோனும், பிரமனும் காணாத, வேதத்தை உணர்ந்தவர்களுக்கு விவரிக்க இயலாத ஜோதி வடிவானவன் என்று அண்ணாமலையாரை உருவகப்படுத்தி பாடுவதை நாம் காணலாம்.

Sunday 13 November, 2011

திருவண்ணாமலையும் சுந்தரமுர்த்தி நாயனாரும் (3)

திருவெண்காடு திருத்தலம் (Photo Courtesy: Shri Raju)


அடுத்த பாடல் புதன் தலமாகிய திருவெண்காட்டிலே சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்

படங்கொள் நாகஞ் என தொடங்கும் பதிகத்தில் அவர் பாடுகிறார்:

மாடம் காட்டும் கச்சி உள்ளீர், நிச்சயத்தால் நினைப்பு உளார் பால்;
பாடும் காட்டில் ஆடல் உள்ளீர்; பரவும் வண்ணம் எங்ங்னே தான்?
நாடும் காட்டில் அயனும் மாலும் நணுகா வண்ணம் அனலும் ஆய 
வேடம் காட்டி திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே !

 இப்பாடலில் கடல் சூழ்ந்த திருவெண்காட்டில் எழுந்தருளி இருக்கும் இறைவனே, நீ உன்னை உறுதியான நினைப்புடன் தொழும் பக்தர்களுக்காக பல மாடங்களை உடைய கச்சியம்பதியில் எழுந்தருளி உள்ளாய். மேலும் பேய்கள் பாடும் காட்டிலும் ஆடல் கொண்டுள்ளாய். உன்னை நாடி வந்த பிரமனும் திருமாலும் உன் அடி முடி காண இயலா வண்ணம் அனல் உரு கொண்டு நின்றவனே, உன்னை நாங்கள் வழிபடுவது எவ்வாறு? என்று திருவண்ணாமலையில் இறைவன் காட்டிய கோலத்தை குறிப்பிட்டு பாடுகிறார்.

Friday 11 November, 2011

திருவண்ணாமலையும் சுந்தரமுர்த்தி நாயனாரும் (2)

அடுத்து நாம் பார்க்கப்போவது சம்பந்தருக்கு முத்துச்சிவிகை, மணிக்குடை, பொற்சின்னம்  எல்லாம் இறைவன் வழங்கிய இடம்.

பெண்ணாகடம் அருகே இப்போது திருவட்டுரை என்று வழங்கப்படும் திருநெல்வாயில் அரத்துறை

இங்கே சுந்தரர் பாடிய பாடல் இதோ:

மாணா உரு ஆகி ஓர் மண் அளந்தான், மலர் மேலவன்,
நேடியும் காண்பு அறியாய்!
நீள்நீள் முடி வானவர் வந்து இறைஞ்சும் நெல்வாயில் அரத்துறை 
நின்மலனே!
வாண் ஆர் நுதலார் வலைப்பட்டு, அடியேன், பலவின் கனி ஈஅது

போல்வதன் முன்,
ஆணோடு பெண் ஆம் உரு ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவத!
ஒரு சூழல் சொல் 

இப்பாடலில் வாமன உரு எடுத்து உலகினை ஒரு அடியால் அளந்த மகாவிஷ்ணுவும், மலர் மேல் அமரும் பிரமனும், அடிமுடி தேடியும் காணமுடியாத, நீண்ட முடியினை உடைய தேவர்கள் வந்து வணங்கும் நெல்வாயில் அரத்துறை இறைவனே! ஒளி பொருந்திய நெற்றியை உடைய 
மாந்தரின் மையலாகிய வலையில் வீழ்ந்து பலாப்பழத்தில் அகப்பட்ட ஈயைபோல் நான் அழிவதற்குள் அவர் மையலில் இருந்து  நான் பிழைத்து போக ஒரு வழியை சொல் என்று திருவண்ணாமலையில் அவர் காட்டிய கோலத்தை குறித்து  பாடுகிறார். 


இத்தலத்தில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரும் பதிகம் பாடியுள்ளனர்.


Monday 24 October, 2011

திருவண்ணாமலையும் சுந்தரமுர்த்தி நாயனாரும் (1)

திருப்பரங்குன்றம் கோவில் (பட உதவி : tamilnow.com)

திருவண்ணாமலை சில அரிய தகவல்கள் பாகம் 1 ல் அத்தலத்தை பற்றி பாடிய அருளாளர்கள் பற்றி குறிப்பிட்டிருந்தேன். சுந்தரமுர்த்தி நாயனார் திருவண்ணாமலையாரை பாடிய சில பாடல்கள் பற்றியும் குறிப்பிட்டு இருந்தேன். அதற்கு ஒரு சகோதரர் அவர் திருவண்ணாமலைக்கு  வந்ததாகவோ அத்தலத்தை பற்றி பாடல் பாடியதாகவோ ஆதார பூர்வமான தகவல்கள் இல்லை என்று தெரிவித்திருந்தார். 

கரும்பு தின்ன கூலியா வேண்டும் ? வன்தொண்டர் நம்பியாரூரர் பாடல்களை படித்து படித்து தேடி தேடி இதோ அவர் அண்ணாமலையாரைக் குறித்து பல தலங்களில் பாடிய பாடல்கள், என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

63 நாயன்மார்களிலே எனக்கு சுந்தரமுர்த்தி நாயனார் மீது ஒரு தனி பாசம் உண்டு. அவர் எங்கள் ஊர்க்காரர் என்பதால் மட்டுமல்ல, அவர் இறைவனிடம் கொண்டிருந்த உரிமையான நட்பின் மேல் ஒரு சின்ன பொறாமையே எனக்கு உண்டு. அவர் பாடிய பாடல்களில் உரிமையான கோபமும், பொருள் தேவைப்படும் போது நீ தானே கொடுக்க வேண்டும் என்ற முறையீடும், அவருக்காக இறைவன் ஒவ்வொன்றும் செய்யும் போது பெருமிதமும், இறைவனுக்கே "நண்பேன் டா" என்ற அதிகாரமும் எனக்கு மிகவும் பிடிக்கும். 

சுந்தரமுர்த்தி நாயனார் பல பாடல்களில் அண்ணாமலையாரை அழைத்திருக்கிறார். அவற்றில் சில இதோ உங்கள் பார்வைக்கு. 

திருப்பரங்குன்றம்:

சுந்தரமுர்த்தி நாயனார் பாடல்களில் ஒரு தலத்தில் இறைவனை பாடும் போது பல தலங்களை குறித்து அவைகளை வைப்பு தலங்களாக வைத்து பாடுவது சகஜம். திருபரங்குன்றத்திலும் அப்படி தான் பாடுகிறார்.

தென்னாத்தெனாத்தெத்தெனா என்று பாடிச் சில்பூதமும் நீரும் திசை திசையன; 

பல்-நால்மறை பாடுதிர்; பாசூர் உளீர்; படம் பக்கம் கொட்டும் திரு ஒற்றியூரீர்; 

பண் ஆர் மொழியாளை ஓர் பங்கு உடையீர்; படு காட்டு அகத்து என்றும் ஓர் பற்று ஒழியீர்; 

அண்ணாமலையேன்என்றீர்; ஆரூர் உளீர் அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே 

இப்பாடலில் அவர் தென்னா தென் தெத்தேனா என்று பாடும் பூதங்கள் பல திசைகளில் உள்ளன, நீரோ நான்கு வேதங்களை பாடுகின்றீர், திருபாசூரில் இருக்கின்றீர், படம்பக்கம் என்னும் பறை கொட்டும் திரு ஒற்றியூரில் இருக்கின்றீர், பண் போன்ற மொழியினை பேசும் உமை அம்மையை ஒரு பாகத்தில் வைத்துள்ளீர். எனினும் புறங்காட்டு பற்று ஒழியீர். அண்ணா மலையேன் என்றீர், திருவாரூரில் உள்ளீர், அடியேன் உமக்கு ஆட்பட்டு பணி செய்ய அஞ்சுவோம் என்று பாடும் போது , திருப்பரங்குன்றத்தில் திருவண்ணாமலையானை குறிப்பிடுகிறார்.

அடுத்தது எங்கே.....காத்திருங்கள் !!!


Sunday 14 August, 2011

திருவண்ணாமலை - சில அரிய தகவல்கள்

ஆலயம் கண்டேன் தமிழிலும் வர வேண்டும் என்று பலர் என்னிடம் கூறி வந்த போது நான் தயங்கினேன். ஆங்கிலத்தில் எழுதிய அதே விஷயங்களை மறுபடி தமிழில் மொழிபெயர்க்கும் போது எழுத்து நடை காரணமாக சுவாரஸ்யம் குறையலாம், அல்லது எழுதிய விஷயங்களையே மறுபடி எழுதும் போது எனக்கு சலிப்பு ஏற்படலாம் என்று நினைத்து ஒரு யோசனை வரும் போது செய்யலாம் என்று இருந்து விட்டேன். எப்போதும் போல் என்னை வழிநடத்தும் என் குருநாதர் மூலம் எனக்கு கட்டளை வந்தது. 



தினமும் காலை மின்சார ரயிலில் வேலைக்கு செல்லும் போது புத்தகம் படிப்பது வழக்கம். சமீபத்தில் அது போல் ரமண ஆஷ்ரமம் வெளியிட்டிருந்த "அண்ணாமலை எனும் கிரி உருவாகிய கிருபைக்கடல்" என்னும் புத்தகத்தை படித்துகொண்டிருந்தேன். அதில் திருவண்ணாமலையை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் இருந்தன. திருவண்ணாமலையில் பிறந்த என் கணவர் மற்றும் அவர் சகோதரியிடம் இத்தகவல்களை பகிர்ந்து கொண்ட போது இருவரும் என்னிடம் சொன்னது -" இதெல்லாம் ஒரு எடத்துல எழுதி வச்சா ஈசி யா படிக்கலாம், முழு புக்கையும் படிக்க எங்க நேரம்". இதே போல் பலருக்கும் உபயோகப்படலாம் என்று கருதி இதோ சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

அரியும் அயனும் அரனின் அடிமுடி காண விழைந்து முடியாமல் தங்கள் பேதமையை நினைத்து வருந்தி அண்ணாமலையை புகழ்ந்து நின்றனர். எல்லையில்லா தழல் தம்பமாக விளங்கிய அரனும் அவர்கள் பக்தியில் மகிழ்ந்து "இங்குற்றேன்" என்று வெளிப்பட்டார். இருவரும் அவரிடம் யாவரும் வழிபடுவதற்கு ஏற்றவாறு அண்ணல் மலையாக உருக்கொண்டு தாங்கள் கண்டு அனுபவித்த ஜோதி வடிவத்தை வருடத்திற்கு ஒரு முறை அனைவருக்கும் காட்டி அருள வேண்டும் என்றும் வேண்டினர். இதை ஏற்ற இறைவன் தான் கார்த்திகை மாதம் ஒரு நாள் ஜோதி வடிவம் காட்டி நிற்பேன் எனவும் அனைவரும் காமிக ஆகம முறைப்படி வணங்கி வழிபட லிங்க வடிவிலும் உறைவேன் என வரமளித்தார்.

இக்கிரி அருணாசலம், அண்ணாமலை, சோணாச்சலம், அருணகிரி என வழங்கப்படுகிறது. இறைவன் அருணாச்சல சிவனாகவும், சோணாத்ரி நாதனாகவும் , அருணகிரி யோகியாகவும் விளங்குகிறார். 

கயிலாயத்திலும் மேருவிலும் அவர் இருந்தாலும் இவ்விடத்தில் அவர் மலையாகவே இருப்பதால் அருணாசலம் கைலாயத்தையும், மேருவையும் விட உயர்ந்தது.

பல பண்டிகைகள் உருவாக காரணமாக இருந்தது அண்ணாமலை. விளையாட்டாக இறைவனின் விழிகளை மூடிய இறைவி அத்துயரின் விளைவை நீக்குவதற்காக காஞ்சிக்கு சென்று தவமிருந்தாள்.அத்தவத்தில்   மகிழ்ந்த சிவனார் அவளை திருவண்ணாமலைக்கு சென்று தவத்தை பூர்த்தி செய்யுமாறு கூறினார். உமையும் கௌதம முனிவரின் ஆசிரமத்தில் இருந்து தவம் இருக்கையில் மகிஷாசுரனை போரிட்டு வென்றாள். இம்முக்தி தலத்து பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் வரக்கூடாதென்று அவனை மைசூருக்கு  கொண்டு வந்து  போரிட்டு வென்றாள். இதுவே நவராத்திரியின் துவக்கம். 

அமரர்கள் அண்ணாமலையானை ஏற்றி வழிபட்ட நாள் மாசி சிவராத்திரியாகும். அதுவே லிங்கோத்பவ காலம். அண்ணாமலையான் ஜோதி தம்பமாக எழுந்த நாள் ஆருத்ர தரிசனமாக கொண்டாடப்படுகிறது. 

மகிஷாசுரனை கொன்ற பார்வதி இனி சிவனை விட்டு தனித்திருந்தால் மீண்டும் ஏதாவது தவறு நடந்து விடும் என அஞ்சி அவரின் இட பாகத்தை வேண்டினாள். கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கிருத்திகை நட்சத்திரமும் கூடிய நன்னாளில் அவர் உமையொரு பாகனானார். 

உலகிலுள்ள சிவ தலங்களில் 68 மிக சிறப்புற்று விளங்குகின்றன. இவற்றுள் உத்தமோத்தம தலங்கள் நான்கு. அவை
திருவாரூரில் பிறக்க முக்தி
சிதம்பரத்தில் இருக்க முக்தி
காசியில் இறக்க முக்தி
திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி

பஞ்ச பூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை. அம்மலையின் மூன்று யோசனை தூரத்தில் (சுமார் முப்பது மைல்) உள்ள அனைவருக்கும் ஆசரு தீக்ஷையின்றி சாயுஜ்யம் பயக்கும் என்பது சிவன் வாக்கு. 

வினையை நீக்கும் மலை உருவில் விளங்குவதால் இம்மலைக்கு அ + ருணன் அதாவது வினையை நீக்குபவன் இங்கு அசலனாக விளங்குகிறான் என்று பொருள். 

சிவவாக்கு
1. அருணையில் ஒரு நாள் உபவாசம் பிற தலங்களில் நூறு நாள் உபவாசத்திற்கு சமம். 
2. சோநாச்சலத்தை பக்தியுடன் பிரதட்சிணம் செய்பவன் சகல லோக நாயகனாகி மேலான பதவியை அடைகிறான்.
3. கார்த்திகை மாதம் பௌர்ணமியில் ஒரு சிறு தீபம் அண்ணாமலையார் சன்னதியில் ஏற்றினால் கொடிய பாவங்களிலிருந்து விடுபட்டு சிவபதம் அடையலாம். 
4. காசியில் கோடி பேருக்கு அன்னதானம் அளிப்பதும் அண்ணாமலையில் அந்தணன் ஒருவனுக்கு அன்னம் அளிப்பதற்கு சமமாகாது. 
5. சாயங்காலத்தில் தீபம் பார்த்து வலம் வருபவர்களுக்கு ஒவ்வொரு அடிக்கும் ஒரு யாகம் செய்த பலன் உண்டாகும். 

பன்னிரு திருமுறைகளில் பாடி திளைத்தவர்கள் 
1. ஞானசம்பந்தர் - தாம் பாடிய ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதாவது பாடலில் அண்ணாமலையாரைக் குறிப்பிடுகிறார். 
2. அப்பர் தாம் பாடிய திருவண்ணாமலை தேவாரப் பதிகங்கள் நான்கிலும், திருத்தாண்டக பண் இரண்டிலும் அண்ணாமலையாரை பாடியுள்ளார். 
3. சுந்தரமூர்த்தி நாயனார் - இவர் பல தலங்களில் பாடிய பதிகங்களில் அண்ணாமலையாரை நினைத்தே தொழுதுள்ளார். 
4.மாணிக்கவாசகர் - திருவாசகம் கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது பாடல்கள், மேலும் திருவம்மானை, மற்றும் திருவெம்பாவை ஆகிய நூல்கள்.
5. சேந்தனார்  எழுதிய திருப்பல்லாண்டு
6. திருமாளிகை தேவர் எழுதிய திருவிசைப்பா
7. திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் இரண்டாவது தந்திரம், எட்டாவது அத்தியாயம்.
8. நக்கீரர், கபிலர், நம்பியாண்டார் நம்பி, காரைக்கால் அம்மையார்.

அத்வைத வேதாந்தத்தில் ஒவ்வொரு மறை இறுதியிலும் ஒவ்வொரு மகாவாக்கியம் உள்ளது. 
ரிக் வேதம் - பிரக்ஞானம் பிரமம் - தன் உணர்வான ஞானமே பிரமம்
யசுர் வேதம் - அஹம் பிரம்மாஸ்மி - நான் பிரமனாக இருக்கிறேன்
சாம வேதம் - தத்வமசி - அது நீயாக விளங்குகிறாய்
அதர்வண வேதம் - அயமாந்மா பிரமம்- என் ஆன்மாவே பிரமம்
இந்த நான்கு வாக்கியங்களின் தாத்பர்ய தத்வமாக விளங்குவது அருணாசலம். 

அண்ணாமலையாரை சுற்றியுள்ள கிரிவல பாதை விக்கிரம பாண்டிய மன்னனால் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. 

வாயுலிங்கத்திற்கு அருகிலுள்ள இரண்டு மைல்கற்கள் மற்றும் நேர் அண்ணாமலையிலிருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவிலுள்ள சாலைக் கல் ஒன்றும் மீன் சின்னம் தாங்கியுள்ளது. 

சூரிய லிங்கத்திற்கு அருகிலுள்ள பழநிஆண்டவர் கோவில் முன்னால் நின்று அண்ணாமலை, அருணாசலம் என்று அழைத்தால் எதிரொலிக்கும்.

துர்வாசர் ஆஸ்ரமத்திலிருந்து நேர் அண்ணாமலை வரை மலையில் நந்தி தரிசனம் காணலாம்.

அக்னி லிங்கத்திலிருந்து பார்த்தால் அண்ணாமலையார் சிகரம் மசூதி போல காட்சியளிக்கும்.

கந்தாஸ்ரமத்தில் சுனை வரும் இடத்திற்கு அருகே ஒரு பாறை கணபதி வடிவில் தோற்றமளிக்கிறது.

ஆதிசங்கரர் அண்ணாமலையார் மேல் அருணாச்சல அஷ்டகம், சந்னவதி, சஹஸ்ரநாமம் போன்றவற்றை இயற்றியுள்ளார். அவர் அண்ணாமலைக்கு வந்தால் அருணாச்சலத்தொடு ஒன்றிவிடுவோம் வினைபயன்படி தாம் மேற்கொண்டுள்ள செயல்களை செய்ய இயலாது என்று நினைத்து சம்பந்தர் போல அரையணி நல்லூரிலிருந்தே (அரகண்டநல்லூர் அதுல்யனாதேஸ்வரரின் பெருமைகளை ஆலயம் கண்டேனில் படித்து மகிழுங்கள்) அண்ணாமலையாரை தரிசித்தார். 

ஆடி மாதம் திருவாடிபூரத்தில் உண்ணாமுலை அம்மன் சன்னதி முன் தீ மிதித்தல் நடைபெறும். இதை வேறு எந்த சிவாலயத்திலும் பார்க்க இயலாது.

இத்தலத்தில் தான் முதல்முதலில் லிங்க வழிபாடு துவங்கியது. எனவே இதுவே மஹா சிவராத்திரியின் பிறப்பிடம். 

இங்கிருக்கும் துர்க்கை அம்மன் ஆலயத்தில் நவராத்திரி கடைசி நாள் அன்று மகிஷாசுரமர்தினி அலங்காரம் செய்வார்கள்.

இது எல்லாவற்றிற்கும் முத்தாய்பாய் கார்த்திகை தீப திருநாள் விளங்குகிறது. சுமார் ஆறு அடி உயர தாமிர கொப்பரையில் ஏற்றப்படும் மகாதீபம் மலையுச்சிக்கு எடுத்து செல்லப்பட்டு மாலை ஆறு மணிக்கு ஏற்றப்படும். பத்து நாட்கள் திருவிழாவிற்கு மகுடமாக விளங்கும் இத்தீபம் ஒரு வாரம் வரை எரியும்.



அண்ணாமலையாருக்கு அரோஹரா!!

குறிப்பு: இக்கட்டுரையை நான் எழுதி முடித்த பிறகு சகோதரர் சூர்யா இன்னும் பல தகவல்களை கருத்து பகுதியில் சேர்த்தார். அவர் எழுதிய அந்த நல்ல விஷயங்களும் அதன் தூண்டுதலாக நான் சேர்த்த சில தகவல்களும் உங்கள் பார்வைக்காக இதோ:

மருத்துவர் சூர்யா:
திருவண்ணாமலையைப் பற்றி எழுதினால் இப்பிறவி போதாது...தோழி பிரியாவின் அரிய முயற்சியில் சிறு அணில் குஞ்சாக ஈடுபடுவதில் ஆனந்தம் கொள்கிறேன். அவனருளாலே அவன் தாள் வணங்கி.....ஆரம்பமே அண்ணாமலை....பேஷ்..பேஷ்...ரொம்ப நன்னாயிருக்கு..

திருவண்ணாமலையைப் பற்றி இதோ சில விஷயங்கள்

தன்னைத்தானே உய்ய அண்ணாமலையாரே கிரிவலம் வந்து காமதகனம் செய்யும் ஒரு தலை சிறந்த சிவாலயம் திருவண்ணாமலையாகும். வருடத்திற்கு இருமுறை - ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின் மூன்றாம் நாளும், தைமாதம் மாட்டுப்பொங்கலன்றும் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் கிரிவலம் வருவார்கள். அம்மனுடன் கொண்ட கோபத்தைத் தணித்த திரு ஊடல் உற்சவம் நிகழும் தலமிது.

மாசி மகா சிவராத்திரியில் இரண்டாம் காலம் லிங்கோத்பவராய் காட்சியளித்து அபிஷேகம் ஏற்கும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும்.


பாரிஜாத மலர் கொணர கிளி உடலில் கூடு விட்டுக் கூடு பாய்ந்த அருணகிரியாரின் பூதயுடல் சில சதிகாரர்களால் (சம்மந்தாண்டான்) எரியூட்டப்படுகின்றது, கிளிவடிவில் வந்து கந்தர் அநுபூதி பாடி, கிளிவடிவத்திலேயே முருகனால் ஆட்கொள்ளப் பட்ட தலம் திருவண்ணாமலை. இங்கு கிளி கோபுரம் மிகவும் பிரசித்தம்.


தல விருட்ஷம் : மகிழ மரம். மகிழ மரத்தடியில் இருந்து பார்த்தால் நவ கோபுர தரிசனம் கிட்டும்.


சமயக்குரவர் நால்வரில் மூவரால் பாடல் பெற்ற தலமிது. சம்பந்தர், அப்பர், மணிவாசகர் இம் மூவராலும் பாடல் பெற்றது. சுந்தரர் பாடியதாகப் பாடல் இல்லை.

மேற்கு கோபுரத்தின் உள்ளே அண்ணாமலையாரின் திருவடி தரிசனம் கண்டு பாபவிமோசனம் அடைவோம்.

பிரியா: 
அருமையான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சூரியா. சுந்தரர் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருந்த போதிலும் நமக்கு கிடைக்கப் பெற்றவை சில நூறு பாடல்கள் மட்டுமே. அவர் திருவண்ணாமலைக்கு வந்ததற்கான குறிப்புகள் கிடைக்கவில்லையே தவிர பல தலங்களில் பாடிய பாடல்களில் அண்ணாமலையாரை குறித்து பாடியுள்ளார். திருபரங்குன்றத்தில் உள்ள இறைவனை பாடும் போது " அண்ணாமலையேன் என்றீர்" என்கிறார். அதே போல் துறையூர், ஸ்ரீவாஞ்சியம், திருவாரூர் ஆகி இடங்களில் பாடும் போது " மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல் அண்ணலும் நன்னறியா ஆதி " என்றும் " பண்டை மால் பரமன் பிறந்தும், இடந்தும், அயர்ந்தும், கண்டிலராய் அவர்கள் கழல் காண்பதரிதாய பிரான்" என்றும் அண்ணாமலையாரை நினைத்தே பாடியுள்ளார்.
மருத்துவர் சூர்யா :
பிரியா....பின்னிட்டேள்....போங்கோ...திருவண்ணாமலையிலேயே ஒரு கல்யாண சுந்தரர் இருக்கும்போது....இந்த ஆலால சுந்தரருக்கு அங்கு வேலையில்லையோ..என்னவோ?..வன்தொண்டன் சுந்தரரைப் பொறுத்தவரை 84 தலங்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடியுள்ளார். திருவண்ணாமலைக்கு வந்து பாடல் பாடினாரா என்பது தெரியாது. பாடியும் இருக்கலாம். சுயநலம் பிடித்த அண்ணாமலையார் அந்த பாடல்களின் தீந்தேன் சுவையை தான் மட்டும் சுவைக்க நமக்கு அளிக்காமலும் இருக்கலாம்.அல்லது அப்பாடல்களை சுவைக்கும் தகுதி இம்மானுட ஜென்மங்களுக்கு இல்லாமலும் இருக்கலாம். சுந்தரர் தான் நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 54 ஆகும். இவற்றை வைப்புத்தலங்கள் என்பார்கள். திருவண்ணாமலையானது மூவரால் பாடல் பெற்ற தலமாயினும், சுந்தரரைப் பொறுத்தவரை அது ஒரு வைப்புத் தலமாகவே உள்ளது.

நீர் எடுத்தாண்ட குறிப்புகள் மிகவும் அருமை...தேவாரக் கடலில் நீ முத்தெடுக்கும் வித்தைக்கு என் வந்தனங்கள். அதிலும்
"மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல்
அண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடும்
திண்ணிய மாமதில்சூழ் தென்திரு வாரூர்புக்
கெண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே"

எப்படித்தான் கண்டு பிடித்தீர்களோ!


அதுமட்டுமா....

தென்னாத்தெனாத் தெத்தெனா என்றுபாடிச்
சில்பூதமும் நீருந் திசைதிசையன
பன்னான்மறை பாடுதிர் பாசூருளீர்
படம்பக்கங்கொட் டுந்திரு வொற்றியூரீர்
பண்ணார்மொழி யாளையொர் பங்குடையீர்
படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியீர்
அண்ணாமலை யேன்என்றீர் ஆரூருளீர்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.....

இது திருவொற்றியூர், திருப்பாசூர், திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் போன்ற தலங்களை திருப்பரங்குன்றத்திலிருந்தபடியே ரவுண்டு கட்டும் பாடல். உம்மால் இதை முதன் முதலாக பருகி....உருக எனக்கொரு வாய்ப்பமைந்தது. நன்றிகள்...

அப்புறம் அந்த "கழல் காண்பதரிதாய பிரான்" பாடல் எனக்கும் காண்பதரியாய பாடலாகவே இருக்கின்றது.....

சரி நம்ம மேட்டருக்கு வருவோம்...

திருவண்ணாமலை ...மேலும் சில விசயங்கள்...
அண்ணாமலையான், கண்ணாரமுதன், அதிருங்கழான், தியாகன், தேவராயன், கலியுகத்து மெய்யன், பரிமள வசந்தராஜன், அபிநய புஜங்கராஜன், வசந்தராயன், புழுகணி இறைவன், புழுகணிப் பிரதாபன், மலைமேல் மருந்தன், மன்மதநாதன், வசந்த விநோதன், வசந்தவிழாவழகன், திருவண்ணாமலை ஆண்டார், திருவண்ணாமலை மகாதேவன், அண்ணாமலை ஆழ்வார், அண்ணாமலை உடையார், அண்ணாமலை நாட்டுடையார் என்பது திருவண்ணாமலையில் உறையும் பேராயிரம் கொண்ட எம்பெருமானின் சில திருநாமங்கள். உண்ணாமலை நாச்சியார், திருக்காமக்கோட்டம் உடைய தம்பிராட்டியார், உலகுடைய பெருமாள் நம்பிராட்டியார் என்பது அழகியின் ஆயிரம் நாமங்களில் சில...